நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பேரிடர் காரணமாக தமது தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது ஏனைய அடையாள ஆவணங்களை இழந்த மாணவர்கள், எஞ்சிய உயர்தரப் பாடங்களுக்குத் தோற்றுவதற்கு விஷேட நடைமுறையொன்றை பரீட்சைத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
NIC இல்லாத மாணவர்கள், அதற்குப் பதிலாக தபால் அடையாள அட்டை அளவுள்ள, உறுதிப்படுத்தப்பட்ட 02 புகைப்படங்களைச் சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியுமென்று பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகள் NIC, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) அல்லது கடவுச்சீட்டு (Passports) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அனர்த்தம் காரணமாக இவற்றை இழந்த மாணவர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றலாம்:
பாடசாலை விண்ணப்பதாரிகள்: அதிபரால் சான்றளிக்கப்பட்ட மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்ட 02 புகைப்படங்களுடன் கூடிய தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகள்: கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய தற்காலிக அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க முடியும்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள், பாடசாலைச் சீருடை இல்லாவிட்டாலும்கூட, தமக்குத் தகுந்த பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை அல்லது வெள்ளம் காரணமாகத் தமது குறிப்பிட்ட பரீட்சை நிலையத்திற்கு பரீட்சைக்காக செல்ல முடியாத மாணவர்கள், உடனடியாகத் தமது பாடசாலை அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர் அல்லது பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டு, தமக்கு அருகிலுள்ள பாதுகாப்பான பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பரீட்சையின் எஞ்சிய 07 நாட்களுக்கான பாடங்கள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடைபெறும்.
நாடு முழுவதும் 2086 பரீட்சை நிலையங்கள், 325 ஒருங்கிணைப்பு மையங்கள் மற்றும் 32 பிராந்திய சேகரிப்பு மையங்கள் ஊடாக இப்பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

0 Comments