Ticker

6/recent/ticker-posts

விளையாட்டுத் துறைக்கான கேல் ரத்னா உயரிய விருது 04 பேருக்கு அறிவிப்பு.

இந்தியாவில் விளையாட்டுத்துறையின் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது, சதுரங்க உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்ட 04 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தொம்மராஜு குகேஷ் என்பவரு
க்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். சீன வீரரான டிங் லிரனுக்கெதிரான 14 சுற்றுகளை கொண்ட குறித்த போட்டித் தொடரில் இறுதிச் சுற்றில் வெற்றி கண்டார் குகேஷ். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியர் எனும் பெருமையையும் குகேஷ் பெற்றார்.
மேலும், 18 வயதேயான குகேஷ் அடங்கிய இந்திய அணி கடந்த வருடம் உலகக் கோப்பை போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றது.
இதே போன்று, பாரீஸ் (Paris) ஒலிம்பிக் போட்டியில் இரட்டை பதக்கங்களை வென்ற மனு பாக்கரும் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 10 மீட்டர் எயார் பிஸ்டல் போட்டியில் தனி நபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற அவர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஒரே ஒலிம்பிக்கில் 02 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் மனு பாக்கர்.

இந்திய ஹாக்கி ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்பீரித் சிங் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் அரை நூற்றாண்டுக்கு பின்னர் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றதில் ஹர்மன்பிரித் என்பவர் முக்கிய பங்கு வகித்தார். ஹர்மன்பீரித் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியை மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இவர்களுடன் கடந்த வருடம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாற்றுத் திறனாளியான தடகள வீரர் ப்ரவீன் குமார் என்பவருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்படவுள்ளது. 2.08 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் இந்தியாவின் தங்க மகனாக பார்க்கப்பட்டார் ப்ரவீன் குமார். இவர்களுடன் 17 மாற்றுத்திறனாளி வீரர் - வீராங்கனைகள் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் வைத்து இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments