நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, திரைப்படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற த்தில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள KVN புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை நீதிபதி PT ஆஷா விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார்.
குறித்த உத்தரவில், "ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் அதிகார வரம்பை தணிக்கை வாரியத்தின் தலைவர் மீறியுள்ளார். தணிக்கை குழு பரிந்துரைத்துள்ள திருத்தங்களை ஜனநாயகன் படக்குழு மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானதாகும். இது போன்ற புகார்களை (Complaint) ஊக்கப்படுத்த முடியாது.
ஆவணங்களை ஆய்வு செய்த போது புகார்தாரரின் குற்றச்சாட்டு பிற்போக்குத்தனமானது என்பது தெரிகின்றது. எனவே, ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை இரத்து செய்கிறேன்.
திரைப்படத்திற்கு உடனடியாக U/A என்று குறிப்பிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார். இந்நிலையில் தனி நீதிபதி PT. ஆஷா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
குறித்த மேன்முறையீட்டு மனு தலைமை நீதிபதி ஶ்ரீவஸ்தவதா மற்றும் நீதிபதி G. அருள் முருகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அவசரமாக மேன்முறையீடு செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் A.R.L. சுந்தரேசன், "ஜனநாயகன் பட விவகார வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில் உடனடியாக சான்றிதழ் வழங்குவதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை இரத்துச் செய்யக் கோராத நிலையில், குறித்த உத்தரவும் இரத்தாகியுள்ளது. டிசம்பர் 22 ஆம் திகதியே தணிக்கை முடிவு தெரிவிக்கப்பட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்வதற்கு தாமதம் ஏன்?" என்று வாதிட்டார்.
தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பு வெளியீட்டு திகதியை அறிவித்தது ஏன்?
தணிக்கை சான்றிதழே இல்லாமல் எப்படி திரைப்படத்தை வெளியிட முடியும்? என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட திகதியை நிர்ணயித்து விட்டு நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.
வெளியீட்டு திகதியை அறிவித்து விட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்களுடைய விருப்பத்திற்கு செயற்பட வேண்டுமா? பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது சான்றிதழுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் தடையை விதித்துள்ளனர்.
மேலும், மேன்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 21 ஆம் திகதிக்கு தள்ளி வைத்தனர். இதன் மூலமாக பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துள்ளது.

0 Comments