இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்குமிடையில் இன்று (09) விசேட சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் பிரகாரம் இன்று பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று காலை 10.30 AM மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழ் மொழி மூல வரலாற்று நூல்கள் மற்றும் பாடத்திட்டங்களில் தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளமை பற்றி பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் பாடப்புத்தகங்களில் கொண்டுவரவேண்டுமென்று தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தினை சேர்ந்த ஆய்வாளர்களை இவ்விடயத்தில் தொடர்புபடுத்தி வரலாற்று தகவல்களை தொகுத்து அவற்றை தமிழ் மொழி மூல பாடத்திட்டத்தில் உள்ளீர்ப்பு செய்வதற்கு இதன்போது பிரதமருக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது. விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் வரலாறுகள் பாடத்திட்டங்களில் உள்ளீர்ப்பு செய்யப்படுமென்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் தரம் - 01 இற்கான பாடப்புத்தகங்களில் அதிக எழுத்துப்பிழைகள் காணப்படுவதாகவும் இதன்போது பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. அவற்றையும் விரைவாக திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் GCE (A/L) பரீட்சைக்கான வினாத்தாள்கள் தயாரிக்கும்போது அவை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் மொழிமாற்றம் செய்யப்பட்டே தமிழுக்கு மாற்றப்படுகின்றது. அதில் குறிப்பாக உயிரியல் பாட வினாத்தாள்களில் மொழிமாற்றம் செய்யும்போது நிறைய பிழைகள் ஏற்படுகின்றது. மொழி மாற்றத்தில் காணப்படும் சிக்கலால் பரீட்சை பெறுபேறுகளிலும் அதிக தாக்கம் ஏற்படுகின்றது. இவ்விடயத்திற்கும் உடன் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெவ்வேறு திட்டங்களினூடாக அமைக்கப்பட்ட பல பாடசாலை கட்டிடங்கள் இன்னும் பூரணப்படுத்தப்படாமல் உள்ளது. அவற்றில் சில ஆபத்தான நிலையில் இடிந்துவிழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அவற்றை பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.
இங்கு பதிலளித்த பிரதமர் கடந்த வருடம் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் பாவிக்கப்படாமல் மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் உரிய அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நேரடியாக தலையிட்டு மேற்படி விடயங்களுக்கும் குறித்த நிதியை பயன்படுத்தவும் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கையெடுக்குமாறும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தொழினுட்ப கல்லூரியில் ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் (Early Childhood Development & Education) கற்கை நெறியினை கடந்த 08 மாதங்களாக தமிழ் மொழி மூலமாக கற்று வருகின்றவர்கள் அதற்கான பரீட்டையினை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்ற விடயம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை அக்கறையோடு கேட்டுக் கொண்ட பிரதமர் விடயத்தை குறிப்பெடுத்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற பெருந்தொகை ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும் பிரதமருடன் பேசப்பட்டுள்ளது. வடக்கில் தமிழ்மொழி மூலம் 3771 வெற்றிடங்களும், சிங்கள மொழி மூலம் 68 வெற்றிடங்களும், கிழக்கில் 5854 வெற்றிடங்களும் நிலவுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட ஆசிரிய நியமனங்களின்போது இயலுமானவரை இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.
மேற்படி முக்கிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஶ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஶ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், துரைராசா ரவிகரன், மருத்துவர் ஶ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments