Ticker

10/recent/ticker-posts

நிமிஷாவுக்கு மன்னிப்பு கிடையாது: திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட முடிவு.

இந்திய தாதியான நிமிஷா பிரியாவுக்கு 'மன்னிப்பு கிடையாது' என்று அவரால் கொலை செய்யப்பட்ட தலால் அப்து மஹதியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு யெமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதி என்பவரை கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த தாதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த மரண தண்டனையை தடுக்க இந்திய அரசு எடுத்த நட வடிக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், 2025 ஜூலை 16 ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விவகாரத்தில் கேரளத்தை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் அகமது என்பவர் தலையிட்டு யெமனின் பிரபல அறிஞரும் சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸுடன் பேச்சுவார்த்தையை நடத்தினார்.

குறித்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து, நிமிஷாவின் மரண தண்டனை த்ற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், நிமிஷா தரப்பினர் வழங்குகின்ற இழப்பீட்டுப் பணத்தை மஹதி குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வது தொடர்பான இறுதி முடிவினை எட்டுவதில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலால் அப்து மஹதியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹதி, நிமிஷா தரப்பின் இழப்பீட்டுப் பணத்தை ஏற்கப் போவதில்லையென்று முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

"குறித்த தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தியவர்கள் எவ்விதத்தில் சமரசத்துக்கு முன்வந்தாலும் அதனை முற்றிலும் நாங்கள் நிராகரிப்போம்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக காத்திருப்போம். அழுத்தம் கொடுப்பதால் மாத்திரம் முடிவு மாறாது. உண்மை மறக்கப்படவில்லை. சட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

அப்தெல்ஃபத்தாவின் பதிவு நிமிஷாவைக் காப்பாற்றும் முயற்சியில் பின்னடைவாக கருதப்படுகின்றது. இதுகுறித்து நிமிஷாவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவிக்கையில்,

'தலால் அப்து மஹதி சகோதரரின் கருத்தை செயன்முறையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறோம், பின்னடைவாக கருதவில்லை. எங்கள் நோக்கம் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் சமாதானப்படுத்துவதாகும்.

மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்ட போது எவ்வளவு, நம்பிக்கையுடன் இருந்தோமோ அதே அளவு நம்பிக்கையுடன் தற்போதும் இருக்கின்றோம். நிமிஷாவைக் காப்பாற்ற நிறைய பேர் வேலை செய்து கொண்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments