மூதூர் - சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் கௌரவ நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு இன்று (23) விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த கௌரவ நீதிபதி, குறித்த இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், சட்ட வைத்திய அதிகரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த அறிக்கைகளை இரண்டு தரப்பினரும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதிமன்ற கௌரவ பதில் நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பெளசான் உக்சாவிட்டுள்ளார்.
குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்று புதன்கிழமை (23) வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தனர்.
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற் கரையோர பகுதியில் மெக் என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டையோடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த இடத்தை பார்வையிட்ட பின்னர், மிதிவடி அகற்றும் பணியை இன்று வரை இடைநிறுத்தி வைக்குமாறும், நீதிமன்றின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் இன்று (23) அகழ்வதற்கும் உத்தரவிடப்பட்டிருந்ததுடன், பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
அந்த வகையில் குறித்த பகுதிக்குள் குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன், குறித்த பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் இருந்து வருகின்றது. அப்பகுதிக்குள் எவரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
எதிர்வரும் 30 ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற இரண்டு தரப்பினரதும் அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிய வருகின்றது.
0 Comments