முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்ககின் விசாரணை இன்று (29) மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி பதவி வகித்த காலப் பகுதியில், அவருடைய மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி, கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளைக் கருத்திற் கொண்ட கோட்டை நீதிமன்ற கௌரவ நீதவான் நிலுபுலி லங்காபுர, முன்னாள் ஜனாதிபதியை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

0 Comments