மட்டக்களப்பு - காத்தான்குடி தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரியான ஸாரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த காணிக்கு அருகேயுள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை (06) சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 04 ஆம் திகதி காணியின் உரிமையாளர் சென்ற போது அங்கு நிலம் பாரியளவில் குழி தோண்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், ஏதாவது அசம்பாவிதம் இடம் பெற்றிருக்கலாம் என்ற அச்சத்தையடுத்து நேற்று புதன்கிழமை (05) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், அப்பகுதியில் ஏதாவது வெடிபொருட்களையோ, அல்லது வேறு ஏதாவது பொருட்களையோ முன்னர் புதைத்து வைத்து விட்டு, அதனை தோண்டி மீட்டெடுப்பதற்காக குறித்த குழி தோண்டப் பட்டிருக்கலாம் என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையிலேயே, விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்துக்கு சென்று, குழி தோண்டப்பட்ட இடத்தில் கம்பிகளால் குத்தியும் மற்றும் எக்ஸ்-ரே (X-Ray) இயந்திரம் மூலமாகவும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments