'வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்' என்னும் தொனிப்பொருளின் கீழ், தூய்மையான நகரத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் 02 ஆம் நாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (08) கிண்ணியாவில் முன்னெடுக்கப்பட்டன.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விஷேட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, கிண்ணியா நகர சபை, பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் (MOH)ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளன.
இன்றைய 02 ஆம் நாள் நடவடிக்கையின் போது, கிண்ணியா அண்ணல் நகர் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பாடசாலை வளாகங்களில் தீவிரமான டெங்கு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நுளம்பு பெருகக் கூடிய இடங்களை அடையாளங் கண்டு அழிப்பதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் இதன் போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னெடுக்கப்பட்டிருந்த களப் பரிசோதனைகளின் போது, நுளம்பு பெருகக் கூடிய வகையில் சுற்றுப் புறத்தை சீரற்ற முறையில் வைத்திருந்த நபர்களுக்கெதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதில் அசமந்தமாக இருப்பவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று இதன் போது அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இச்செயற்திட்டத்தில் கிண்ணியா நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந்த விஷேட பணியில், கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம். மஹ்தி, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி A.M.M. அஜித், கிண்ணியா பிரதேச செயலாளர் M.H.M. கனி, ஆகியோருடன் நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments