Ticker

6/recent/ticker-posts

அரிசிக்கு தட்டுப்பாடு: சோற்றுக்கு பதிலாக பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு.

பாடசாலை மாணவர்களுக்கிடையில் நிலவுகின்ற மந்த போசணையை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மதிய போசணைத் திட்டத்தின் கீழ் கறியும், சோறும் வழங்குவதற்கு நியமித்திருந்த போதிலும் வெல்லவாய தெபர ஆர கனிஷ்ட  பாடசாலையொன்றில் ரொட்டி விநியோகிக்கப்பட்டிருப்பதாக இன்றைய (06) ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபர ஆர கனிஷ்ட பாடசாலையில் சோற்றுக்கு பதிலாக ரொட்டியும் பேரீச்சம்பழமும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெற்றோர் ஒப்பந்தக்காரரை வினவிய போது சோறு சமைப்பதற்கு ‘அரிசி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரக்கறி, இறைச்சி, மீன் அல்லது முட்டையுடன் சோறும், பழமும் வழங்கப்பட வேண்டும் என்பதே பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலாகும். இது தொடர்பில் வெல்லவாய கல்விப் பணிப்பாளர் சுசில் விஜயதிலக்க ஒப்பந்தக்காரரை விசாரித்த போது, அவர் அரிசி பெற்றுவந்த அரிசி ஆலை மூடப்பட்டுள்ளதாகவும் அரிசி தட்டுப்பாடு காரணமாகவே ரொட்டி விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வலயக்கல்வி பணிப்பாளர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments