2026 முதல் நாடு முழுவதுமுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயற்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு நேற்று (22) பாராளுமன்றத்தில் கூடியபோது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
ஆரம்பப் பிள்ளைப்பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், சுமார் 19,000 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாகாணத்திலும் ஆசிரியர் பயிற்சி நடத்தப்படுமென்றும், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் பிரகாரம் கற்பித்தல் செயன்முறை செயற்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
எந்தவொரு பாடசாலையும் மூடப்பட மாட்டாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.
கல்வி முறையின் தரமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இது மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

0 Comments