2026 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதை தாம் எதிர்ப்பதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை அதிகரிப்பது குறித்த தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த தவணை ஆரம்பமானதும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுமென்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பக்ஞ்ஞாசேகர தேரர், அதிபர், ஆசிரியர் உட்பட கல்வித்துறை சார்ந்தவர்களுடன் எவ்விதமான கலந்துரையாடல்களையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
தற்போது 1.00 PM - 1.30 பின் மணியளவில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். அதிகாலை 03 மணிக்கு எழுந்து பல கிலோ மீற்றர் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் உள்ளனர். அவ்வாறெனில், அந்த மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கமைய அருகிலுள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வசதிகளையே னும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு எந்தவொரு முன்னாயத்தமும் திட்டமிடலும் இல்லாமல் பாடசாலை நேரத்தில் 30 நிமிடத்தை அதிகரித்துள்ளமை நியாயமற்றது என்றும் தெரிவித்தார்

0 Comments