ஆசியப் பிராந்தியத்தில் வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாகவுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் நிஷாணி உபயசேகர என்பவர் 2012 ஆம் ஆண்டில் நாட்டில் வயதான மக்கள் தொகை 12% ஆக இருந்தது என்றும், அது 2024 ஆம் ஆண்டில் 18% ஆக உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கையில், 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12% ஆக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் வயதான சமூகமானது 18% ஆக உயர்ந்துள்ளது.
2040 ஆம் ஆண்டளவில் இம்மக்கள் தொகையில் 25% பேர், அதாவது 04 பேரில் ஒருவர் வயதானவராக இருப்பார்கள் என்று நாங்கள் முன்னறிவித்துள்ளோம்.
ஆசியாவிலுள்ள ஒத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாகவுள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கு பிறக்கும் போதே ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளமையும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதும் முக்கிய காரணங்களாகும்." வயதான சமூகத்தினரிடையே காணப்படுகின்ற பலவீனங்கள் காரணமாக ஏற்படும் தடுக்கி விழுதல் தற்போது ஒரு நோயியல் நிலைமையாக அடையாளம் காணப்பட்டுள்ளதென்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முதியோர் நோய் நிபுணர் வைத்தியர் சிதிர செனவிரத்ன அவர்கள் குறிப்பிட்டார்.
"65 வயதுக்கு மேற்பட்டவர்களில், 03 பேரில் ஒருவர் 01 வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேர் ஒரு வருட காலத்துக்குள் தடுக்கி விழுவதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு சமயங்களில் விழுவது ஒரு நோயாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால், இப்போது விழுவதையும் ஒரு நோய் என்று நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
பெரும்பாலும் விழுந்த பிறகு காயம் ஏற்பட்டால், காயத்திற்கு சிகிச்சையளிக்கிறோம்; ஆனால், விழுவதற்கான காரணம் என்னவென்பதைப் பார்ப்பதில்லை. வயதாகும் போது விழுந்தால், இது வயதின் காரணமாக நடக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால், அது சாதாரணமானதல்ல. விழுவது என்பது ஒரு நோய்தான். விழுவதால் விபத்துகளுக்கு முகம் கொடுக்கவும் நேரிடலாம். விழுவதால் மரணங்கள்கூட நிகழும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
பலவீனமானது விழுவதற்கான ஒரு முக்கிய காரணியாகும். இதனை பரிசோதித்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 Comments