அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, F. A. A எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின் பிரகாரம், 1,400 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க பாராளுமன்றத்தில் நிதி சட்ட மூலத்திற்கு அனுமதி கிடைக்காமையா ல், அரச துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் அன்றாடப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமானப் போக்குவரத்தும் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகின்றது.
இதன்படி வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக 1400 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (8) மாத்திரம் 6,000 விமானங்கள் தாமதமடைந்துள்ளன. இதனால் பயணிகள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்துத்துறை ஊழியர்களில் பெரும் பகுதியினர் சம்பளமற்ற விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.
குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள், சம்பளமில்லாமல் தொடர்ந்து வேலைக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் உடல் நிலையைக் காரணம் காட்டி விடுப்பும் எடுத்துள்ளனர்.
இதனையயடுத்து, போதிய பணியாளர்கள் இல்லாததால், விமானப் போக்குவரத்தை ஆணையத்தால் பாதுகாப்பாக கையாளவும் முடியவில்லை.
இதனையடுத்து ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்களுடைய விமான இயக்கத்தை குறைத்ததையடுத்து, 1,400 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன.
அட்லாண்டா, டென்வர், நியூவார்க், சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 40 முக்கிய விமான நிலையங்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
பணியாளர் பற்றாக்குறை காரணமாக, 40 முக்கிய விமான நிலையங்களில் 10 சதவீத விமானங்களை குறைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலை தொடர்ந்தால் 20 சதவீதம் வரை விமானங்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

0 Comments