பங்களாதேஷ் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் 1971 ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்குவதற்கு ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தால், பிரதமராக பணியாற்றிய ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதே சமயம் பங்களாதேஷில் ஏற்பட்ட வன்முறையில் 1400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , பங்களாதேஷ் நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனையடுத்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு பங்களாதேஷ் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கடந்த 2014 நவம்பர் 18 ஆம் திகதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பங்களாதேஷிற்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
கடந்த வருடம் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மனித குலத்திற்கு எதிரானது என்று இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் 'நான் மீண்டும் வருவேன்' என்ற ஓடியோவை (Audio) ஷேக் ஹசீனா வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என்று பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு 'போராடியவர்கள் மீது கொடூர ஆயுத தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியமை, மனித குலத்திற்கு எதிரான வன்முறை மற்றும் திட்டமிட்டு வன்முறைக்கு மூளையாக ஷேக் ஹசீனா செயல்பட்டுள்ளார்' என்று குறிப்பிட்ட நீதிபதி அவருக்கு மரண தண்டனையை தீர்ப்பாக அறிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான குறித்த வழக்கு, பங்களாதேஷ் அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகின்றது. அவர் குற்றம் சாட்டப்பட்டால், ஒரு நாட்டின் உயரிய அரசியல் தலைவர் மீது இத்தகைய கடுமையான தண்டனை விதிக்கப்படுவது அரிதான நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய இடைக்கால அரசாங்கம், ஹசீனாவை நாடு கடத்துமாறும் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இத்தீர்ப்பு சர்வதேச அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments