Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) உயிரியல் விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: 03 நாட்களின் பின்னர் தெரிந்த உண்மை; உடனடியாக நீக்கப்பட்ட அதிகாரிகள்.


நெல்லியடியிலுள்ள பிரபல பாடசாலையொன்று GCE (A/L) பரீட்சை மையமாகச் செயற்பட்டுவரும் நிலையில், அங்கு உயிரியல் பாடத்தை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி (Part I) விடைத்தாள்கள் திருத்தல் பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளன.

இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது தவறு இந்த முறையே நேர்ந்திருப்பதுடன், தொடர்புடைய மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மிகவும் மோசமான முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, GCE (A/L) பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நெல்லியடியிலுள்ள பிரபல பாடசாலையொன்று பரீட்சை மத்திய நிலையமாகச் செயற்பட்டு வருகின்றது. அங்கு சமீபத்தில் உயிரியல் பாடத்தின் முதலாம் பகுதியான பல்தேர்வு வினாவுக்கான பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி விடைகளை எழுதிய பின்னர் முறைப்படி கையளித்துள்ளனர். குறித்த விடைத்தாள்கள் அன்றைய தினத்தில் உயரிய பாதுகாப்புடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட வேண்டும். ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக் குறைவால் அவை திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


03 நாள்களின் பின்னர் அங்கு சென்று பார்த்தபோதே, காகிதாதிகளுடன் அவை கட்டப்பட்டு இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த விடைத் தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் நிலை தோன்றியுள்ளது.

GCE (A/L) பரீட்சையில், அதுவும் உயிரியல் போன்ற பாடங்களில் ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள்கூட மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வகையிலேயே அமைகின்றன. இவ்வாறு இருக்கையில், ஒரு பகுதி விடைத்தாள்கள் திருத்தல் பணிகளுக்கு அனுப்பப்படாமையானது மாணவர்களின் இத்தனை ஆண்டு கால கல்வி வாழ்க்கையையும் அர்த்தமற்றதாக மாற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட 21 மாணவர்களுக்கும் அடுத்த கட்டமாக என்ன தீர்வினை வழங்குவது? என்பது தொடர்பில் பரீட்சை திணைக்களமே முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இப்பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களுக்கு எதிராகத் திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments