இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துகளுக்கான பயணச்சீட்டு கட்டணங்களை பண அட்டை மூலமாக செலுத்தும் முறையை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலிண சமரகோன் அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில் :
107 பேருந்து டிப்போக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பேருந்துகளைப் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 173 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பழுது பார்க்கும் பணிகளை 2026 மே மாதத்திற்கு முன்னர் முடிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜூன் மாதம் நாட்டில் மெட்ரோ பேருந்து சேவையொன்று அறிமுகப்படுத்தப்படும். அதற்கு முன்னர் மெட்ரோ பேருந்து சேவைக்கான ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து பயணச் சீட்டுகளுக்கான வங்கி அட்டை மூலமாக கட்டணம் செலுத்தும் முறையை இம்மாதத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர, பேருந்து பழுதுபார்ப்பதிலுள்ள பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டார். உதிரிப் பாகங்களைக் கொள்வனவு செய்வதற்கு டிப்போக்களுக்கு போதிய வசதி இல்லை. சில டிப்போக்கள் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் நிலையங்களுக்குக் கடன்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் உதிரிப் பாகங்களை வழங்குபவர்கள் பெரும்பாலும் தரமற்ற உதிரிப் பாகங்களை வழங்கியுள்ளனர்.
நேர்மையாகவும் முறையாகவும் உதிரிப் பாகங்களை வழங்குபவர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே காணப்படுகின்றனர்.
எனவே, இந்த மோசடி மற்றும் ஊழல்களை ஒழித்து, இலங்கை போக்குவரத்து சபையை மீட்டெடுக்குகின்ற வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

0 Comments