இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைமை உருவாகி வருவதால் கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பொழியக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 mm இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பொழியக் கூடும்.
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் 2.00 PM இற்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பொழியக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 KM வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக் கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்மென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பொழியும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலியல் திணைக்களம் பொதுமக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளது.

0 Comments