சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி விஷேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுப்பதற்க்கு போக்குவரத்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி முதல் குறித்த விசேட திட்டங்கள் அமுலுக்கு வருகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை ஏப்ரல் 09 முதல் விஷேட பேருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக நாளொன்றுக்கு சுமார் 250 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ஊர்களுக்குச் செல்வதற்காக ஏப்ரல் 09 முதல் 13 வரை மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் 17 முதல் 21 வரை தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை உடனடியாக சேவையில் இணைப்பதற்கும் தயார் நிலையிலுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
தனியார் பேருந்து சேவைகளை ஒழுங்குபடுத்தும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் விஷேட நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது. பயணிகளின் வருகை மற்றும் தேவைக்கேற்ப போதுமான அளவு மேலதிக பேருந்துகளை வழங்குவதற்கு ஆணைக்குழு இணங்கியுள்ளது.
பேருந்துகளுக்கு இணையாக புகையிரத திணைக்களமும் விஷேட சேவைகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் விஷேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும்.
கரையோர மார்க்கம், வடக்கு மார்க்கம் மற்றும் பிரதான மார்க்கங்களில் தற்போதுள்ள புகையிரதங்களுக்கு மேலதிகமாக இச்சேவைகள் இடம் பெறவுள்ளன.
பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் குறித்த ஒருங்கிணைந்த போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயணிகள் முன்கூட்டியே தங்களுடைய ஆசனங்களை பதிவு செய்து கொள்வதன் மூலமாக பயணச் சிரமங்களைத் தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 Comments