உள்நாட்டு அரசியல் சிக்கல்களால், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் ஒக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், அதற்கு முன்னர் அவர் பதவி விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கேற்ப அவர் இன்று அல்லது இவ்வாரத்தில் தனது பதவி விலகல் குறித்து அறிவிக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துதில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்து விட்டது. ஏற்கனவே சர்வதேச நெருக்கடிகளை ட்ரூடோ சந்தித்து வரும் நிலையில் உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகின்றது.
ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவருடைய அரசு மீது எதிர்வரும் 2025 ஜனவரி 27 ஆம் திகதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.
அதேபோன்று கடந்த டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து துணை பிரதமரும், நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் என்பவரும் இராஜினாமா செய்தார். இதனையடுத்து அவருடைய சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அவர் இன்று அல்லது இவ்வாரத்தில் தனது இராஜினாமாவை அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நாளை மறுநாள் (08) முக்கிய கூட்டத்தை லிபரல் கட்சி கூட்டவுள்ள அதே வேளையில், அதில் கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளும் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கூட்டத்தில், இடைக்கால பிரதமர் யார்? என்பது பற்றியும் முடிவு எட்டப்படும். அதன் பின்னரே ட்ரூடோ பதவி விலகலை அறிவிப்பார் என்றும் கூறப்படுகின்றது.
0 Comments