சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், உரிய ஆய்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த காலங்கவில் கொவிட் 19 தொற்று நோய் பரவி 05 ஆண்டுகளுக்குப் பின்னர், சீனாவில் மேலும் பல வைரஸ்கள் தற்போது பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Human metapneumovirus (HMPV) எனப்படும் வைரஸ் நிலை முக்கியமாக பரவுகின்றது. மேலும், அவர்களில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் இருப்பதாக வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
சீனாவில் பரவி வரும் குறித்த இன்புளுவன்சா வைரஸால் நிலைமை வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சீனாவின் தற்போதைய நிலைமை குறித்த யோசனையை சமூக ஊடகங்கள் மூலமாக பெற முடியும் என்றும் வெளிநாட்டு ஊடகங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
குறித்த வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ள அதே வேளையில், சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு பரவுவதாகச் சொல்லி, அதனை கண்காணிக்க அந்நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம் பைலட் கண்காணிப்பு திட்டத்தையும் உருவாக்கியிருந்தது. அங்கு HMPV வைரஸ் காரணமாகவே இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. தற்போது சீனாவில் குளிர்காலம் நிலவுகின்ற சூழலில், வரும் காலத்தில் இச்சுவாச நோய்களின் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது.
இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறியாக இருப்பதாகவும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சில கடுமையான சூழ்நிலைகளில், குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களிடையே மூச்சுக் குழாய் அழற்சி அல்லது நிமோனியா பாதிப்பும்கூட அறிகுறிகளாக இருப்பதாகவும் சீன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நுரையீரல் பாதிப்பு அல்லது எம்பிஸிமா போன்ற நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. குறித்த வைரஸ் இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் அல்லது ஏரோசோல்கள் மூலமாகப் பரவுகின்றது. மேலும், நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பது, அசுத்தமான சூழல்கள் காரணமாகவும் HMPV வைரஸ் பரவுவதாகச் சீன CDC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 03 முதல் 05 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த HMPV வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி அல்லது தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை. தற்போதைய சூழலில் நோயாளிகளுக்கு அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மட்டுமே சிகிச்சை தரப்படுகின்றது.
அதே வேளை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முடிந்தவரை நெரிசலான பகுதிகளை தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுற்றியுள்ள இடங்களில் நல்ல சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்றும், தங்கும் அறையைச் சரியான காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதி செய்யுமாறும் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, சீனாவில் பரவியுள்ள குறித்த வைரஸ் ஏனைய நாடுகளுக்குள் ஊடுருவதை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேஎகொண்டு வருகிறது. இலங்கையும் இது தொடர்பிலான முன்னெடுப்புகளை மேற்கொள்கின்ற அதே வேளையில், சீனாவிலுள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
TO JOIN WITH US:
0 Comments