திருப்பூர், கொங்கு மண்டலத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் குறித்து வழக்கறிஞர் தமிழ் வேந்தன் ‘Arrowroots Tamil’ யூடியூப் (Youtube) சேனலில் பேசிய விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திருமணமாகி 78 நாட்களேயான பெண் ரிதன்யா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இறப்பதற்கு முன்னர் ரிதன்யா ஒரு ஆடியோவை பதிவு செய்து, தனது தற்கொலைக்கு மாமியார் சித்ராதேவி, மாமனார் மற்றும் கணவர் கவின் குமார் ஆகியோரே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆடியோவில், தனது மன உளைச்சல் மற்றும் குடும்பத்தினரின் தொடர் துன்புறுத்தல் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
அத்தோடு, ரிதன்யா, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவருடைய திருமணத்திற்கு 500 பவுன் நகை வரதட்சணையாக பேசப்பட்டு, 300 பவுன் நகை அளிக்கப்பட்டது, மீதி 200 பவுன் நிலுவையில் உள்ளது. மேலும், 80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் ஒரு கோடி ரூபாய் வணிகத்திற்காகவும் வழங்கப்பட்டதாக தமிழ் வேந்தன் குறிப்பிட்டார்.
ஆனால், மாமியார் சித்ராதேவியின் “இங்கு வராதே; அங்கு போகாதே” எனும் தொடர் துன்புறுத்தல் மற்றும் கணவர் கவின் குமாரின் அவமரியாதையான நடத்தைப் போக்கு, ரிதன்யாவை மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவருடைய பிறப்புறுப்பில் 04 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. இதையெல்லாம், அவருடைய பெற்றோர்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.
ஆடியோவில், கவின் குமார் இரவு நேரங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ரிதன்யா குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அவர் தனது பெற்றோரிடம் புகார் கூறியபோதிலும், “குடும்பத்தில் இப்படித்தான் இருக்கும்; அட்ஜஸ்ட் செய்” என்று அறிவுறுத்தப்பட்டதாகவும், 05 முறை பஞ்சாயத்து பேசப்பட்டும் பயனில்லை என்றும் கூறியுள்ளார்.
மன உளைச்சலின் உச்சத்தில், ரிதன்யா ஒரு நாள் காரில் பயணித்து பூச்சி மருந்து வாங்கி, செய்யூர் எனும் இடத்தில் அதனை உட்கொண்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
ஆடியோவில், தனது நகைகள் மற்றும் சாவி ஆகியவை இருக்கும் இடத்தை தெளிவாகக் குறிப்பிட்டு, “இந்த குடும்பத்தில் வேறு ஒரு பெண் இப்படி அவதிப்படக் கூடாது” என்றும் கூறியுள்ளார்.
தமிழ் வேந்தன், இத்தற்கொலைக்கு மாமியார், மாமனார் மற்றும் கணவரின் மனரீதியான துன்புறுத்தல் மற்றும் வரதட்சணை தொடர்பான பேராசை முக்கிய காரணம் என்று விமர்சித்தார்.
அவர், தற்கொலை தவறான முடிவு என்றாலும், இத்தகைய மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கு, குடும்பங்கள் மற்றும் சமூகம் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த வழக்கில் வரதட்சணை மற்றும் மனரீதியான துன்புறுத்தல் குறித்தும் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
0 Comments