வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-60 கிம் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென்று அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து "மோந்தா" என்ற புயலாகவும் தீவிரமடைந்து, அக்டோபர் 26, 2025 அன்று இரவு 11.30 பின் மணிக்கு தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 KM தொலைவில், நிலை கொண்டுள்ளது.
இந்நிலை வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28, 2025 அன்று காலை ஒரு புயலாக மேலும் தீவிரமடைந்து அக்டோபர் 28 அன்று மாலை / இரவு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டையூடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகத்தினரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிம் வரை காணப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 KM வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டினை சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் குறித்த கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments