Ticker

10/recent/ticker-posts

19 வயதிற்குள் 08 ஆண்களை திருமணம் செய்த யுவதி. பொலிஸார் வலை வீச்சு

19 வயது யுவதியொருவர் பணம் பறிக்கும் நோக்கத்தில் 08 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரின் கர்ஜி தெருவை சேர்ந்த 19 வயதான முத்திரெட்டி வாணி என்ற யுவதிக்கும், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் சோம்பேட்டில் அமைந்துள்ள துர்காதேவி கோயிலில் கடந்த சில வாரத்திற்கு முன்பு திருமணம் இடம் பெற்றது. 

திருமணத்திற்கு பின்னர் புகையிரதம் மூலம் மணமகன் ஊருக்கு பயணிக்கையில், விசாகப்பட்டினம் புகையிரத நிலையம் வந்ததும், கழிவறைக்கு (Toilet) செல்வதாக தெரிவித்து கீழே இறங்கிய வாணி என்ற குறித்த யுவதி மீண்டும் புகையிரதத்தில் ஏறவில்லை.

இதனையடுத்து, புதிய மனைவியை காணாமல் பதறிய நபர் அவரை அங்குமிங்கும் தேடியலைந்தார். மனைவி வாணி மாயமானது குறித்து இச்சாபுரத்திலுள்ள வாணியின் அத்தை சத்யாவின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கச் சென்ற போது, வாணி அங்கிருந்ததை கண்டு மணமகன் தரப்பினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக கொடுத்த ரூபாய் 01 இலட்சம் பணத்திற்காகதான் குறித்த இளைஞரை திருமணம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, மணமகன் தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவயதிலிருந்து பெற்றோரை இழந்த வாணியை அவருடைய தாய் வழி அத்தையான சத்யா என்பவரே வளர்த்து வந்துள்ளார். 

கர்நாடக நபர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 08 ஆண்களை திருமணம் செய்ததுடன், அதன் பின்னர் அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு மாயமாகியுள்ளனர்.

வாணி அப்போது வயது குறைந்த பெண் என்பதால், பணத்தை பறித்தமை குறித்து புகார் அளித்தால் மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக தங்கள் மீதும் வழக்கு பாயும் என்று யாரும் முறைப்பாடு வழங்க முன்வைரவில்லை. 

தற்போது வாணியும் அவருடைய அத்தையும் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். ஏற்கனவே, அவரை திருமணம் செய்து பணத்தை இழந்த நாகிரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகியோரும் தற்போது காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர். 


Post a Comment

0 Comments