Ticker

10/recent/ticker-posts

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் (26) 21 வருடங்கள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

இதனால் இலங்கையில் 35,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். மேலும், பெருமளவிலான சொத்துக்கள் அழிவடைந்தன.

சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூருகின்ற வகையில், 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி 'தேசிய பாதுகாப்பு தினமாக' பெயரிடப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இம்முறை தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு இன்று (26) காலை பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.

இம்முறை தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமி பேரழிவினால் மாத்திரமன்றி ஏனைய அனர்த்தங்களாலும் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்படவுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பல்வேறு சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 AM மணி முதல் 9.27 AM மணி வரை 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Post a Comment

0 Comments