தென்னிந்திய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வெங்கட்ராஜ் தனது 68 வது வயதில் இன்று (05) காலமானார்.
‛லொள்ளுசபா' காமெடி நிகழ்ச்சியில் ஒல்லியான தேகத்துடன் காமெடி செய்து நடித்து வந்தவர் வெங்கட்ராஜ் ஆவார். இவர் நடிப்பு, நடனம், டயலாக்கிற்கு (Dialogue) தனி இரசிகர் கூட்டமுண்டு. ‛கலக்கப் போவது யாரு' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு பற்றி பிரபலமானார். மனிதன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
பல காமெடி ஷோக்களில் (Comedy Show) பங்கேற்றுள்ளார். சென்னை கிண்டி அருகே வசித்து வந்த இவருக்கு நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டு பல மாதங்களாக அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
அதன் பின்னர், கீழே விழுந்து காலிலும் அடிபட்டுள்ளது. இந்நிலையில் மூச்சுதிணறல் காரணமாக இன்று (05) சென்னையில் காலமானார்.
நாளை வேளச்சேரியில் அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு மனைவியும், மகன் ஒருவரும், மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவருடைய சிகிச்சை செலவுக்கு பாலா, லொள்ளுசபா சுவாமிநாதன், ஜீவா உட்பட பலர் உதவியுள்ளனர்.
இப்போதும் லொள்ளுசபா குழுவுக்கு அவர் குடும்பத்தினர் சார்பில் தகவல்கள் அனுப்பப் பட்டுள்ளதாம். லொள்ளுசபா நிகழ்ச்சியில் நடித்த ஆண்டனி, சேஷூ ஆகியோரை தொடர்ந்து வெங்கட்ராஜ் இறந்தமையானது அந்நிகழ்ச்சியின் இரசிகர்களை சோகமடையச் செய்துள்ளது.

0 Comments