இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான நீண்டகால ஊழல் வழக்கு விசாரணையை ஜெருசலேம் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), நெதன்யாகு மீதான குறித்த வழக்கை கைவிட வேண்டுமென்று தெரிவித்த சில மணிநேரங்களிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இரகசிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் மற்றும் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் குறித்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் பிரதமர் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை அவர் மறுத்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரித் தலைவரை கவிழ்க்க திட்டமிட்ட இடதுசாரி வேட்டை என்று தன் மீதான விசாரணையை பெஞ்சமின் நெதன்யாகு சாடியுள்ளார்.
சுமார் 06 வருடங்களாக தொடர்ந்து வரும் குறித்த வழக்கு, தற்போது இரகசிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நெதன்யாகு மீதான இந்த குற்றச்சாட்டுக்கு, டொனல்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றார்.
தன்னுடைய நாட்டிற்காக இவ்வளவு செயற்பட்டுள்ள ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு சூனிய வேட்டை, எனக்கு நினைத்துப் பார்க்கவே முடியாதுள்ளது என்று ட்ரம்ப் அவரின் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நெதன்யாகுவின் விசாரணை உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் இவ்வாறானதொரு நீதியற்ற தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கடுமையாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments