அனர்த்த நிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்காத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினுடைய செயலாளரால் நேற்று (16) அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தித்வா சூறாவளி காரணமாக தங்கள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்கு பொதுப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டதால் பணிக்கு வர முடியாத அல்லது வீதிகள் மூடப்பட்டதால் அல்லது பேரழிவுகள் காரணமாக பணிக்கு வர முடியாத அதிகாரிகளுக்கு இச்சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இச்சிறப்பு விடுமுறையை பெறுவதற்கு அவர்கள் பணிக்கு வர முடியாததற்கான காரணத்தை தெரிவித்து நிறுவனத் தலைவரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் மேலும், பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட தங்கள் பகுதியின் கிராம அலுவலரின் பரிந்துரையும் இருத்தல் வேண்டும்.
பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட அலுவலரின் கோரிக்கையை நிறுவனத் தலைவர் பரிசீலிக்க வேண்டுமென்றும், அதன் துல்லியம் குறித்து அவர் தனிப்பட்ட முறையில் திருப்தியடைந்தால் மாத்திரமே, அவர் பணிக்கு சமூகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான சிறப்பு விடுப்புக்கான ஒப்புதலுக்காக அதைத் துறைத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மாத்திரமே இச்சிறப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments