கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 mm இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர இது குறித்துக் கூறுகையில், இந்த நிலைமையால் தெனபிட்டிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மண்சரிவினால் சில வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த வீடுகளில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், நுவரெலியாவில் நிலவும் மழை காரணமாக ரிகில்லகஸ்கடை பகுதியில் வாலப்பனை வீதி மண்சரிவினால் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் நேற்று (18) 100 mm இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும் சில சிறியளவிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ள போதிலும், அவை குறித்த விரிவான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இன்றும் மழை பொழியக் கூடும் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்துள்ளதால் மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
ஏதேனும் அவசர அனர்த்த நிலை ஏற்பட்டால் நிவாரணம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், மண்சரிவு அறிகுறிகள் தென்படும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர்ப்பாசன பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் M.S. சூரியபண்டார கூறுகையில், மகாவலி கங்கையின் மணம்பிட்டிய பகுதியில் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டத்தை விடவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக திருகோணமலை வரையிலான தாழ்நிலப்பகுதிகள் மேலும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதோடு, சோமாவதிய பிரவேச வீதி ஏற்கனவே நீரில் மூழ்கியுள்ளது.
மல்வத்து ஓயாவின் தந்திர்மலை நீர்மட்டம் சிறு வெள்ள மட்டத்தை எட்டியுள்ள போதிலும், நீர்மட்டம் மேலும் அதிகரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 34 நீர்த்தேக்கங்களும், 48 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்கின்றன.
எவ்வாறாயினும், எந்தவொரு நீர்த்தேக்கத்திலிருந்தும் அபாயகரமான முறையில் நீர் திறந்துவிடப்படவில்லை என்று தெரிவித்த அவர், திடீர் நீர் அதிகரிப்பு அல்லது மாற்றங்கள் குறித்து அவதானமாக இருந்து அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

0 Comments