சாதாரண மக்கள் பயன்படுத்துகின்ற சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமென்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யும் Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000cc வரம்புக்குட்பட்ட வாகனங்களுக்கான வரியைக் குறைத்து வழங்குங்கள்.
ஒரு சாதாரண Wagon R வாகனத்திற்கு சுமார் 40 இலட்சம் ரூபாய் வரி விதிக்கப்படுகின்றது. இது நடுத்தர வர்க்கத்தினராலேயே வாங்கப்படுகின்றது. அத்துடன், இது சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட வாகனமாகும்.
உண்மையில் இவ்வாறான வாகனங்களையே ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களுக்கான நிபந்தனைகளைத் தளர்த்துமாறும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனர்த்த நிலைமையால் பொதுமக்களின் பொருளாதார மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பதிவு செய்தவர்களால் வாகனங்களை வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மூன்று மாதங்கள் கடந்தவுடன் 03% அபராதம் விதிக்கப்படுகின்றது. எனவே, நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, முடிந்தால் குறித்த 03% அபராதத்தை நீக்கித் தருமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments