Ticker

6/recent/ticker-posts

வரதட்சனை கொடுமையால் பலியான பெண்: சந்தேக நபர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

இந்தியாவின் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிதன்யா என்ற பெண் தற்கொலை வழக்கில், அவருடைய கணவர் கவின்குமார், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கு, வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டதால் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

ரிதன்யாவின் தற்கொலை, அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வரதட்சணை கோரிக்கைகளால் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கில், கவின்குமார் மற்றும் அவருடைய பெற்றோருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, மூவரும் ஜாமீன் கோரி திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், ரிதன்யாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் இந்த ஜாமீன் மனுவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கின் தீவிரத்தன்மையையும், குற்றச்சாட்டுகளின் பின்னணியையும் கருத்திற் கொண்டு, நீதிபதி குணசேகரன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு, ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தாலும், சமூக ஊடகங்களில் இது குறித்த பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளின் அவசியத்தை இத்தீர்ப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது.

இணையத்தில், பலர் இத்தீர்ப்பை வரவேற்று, நீதித்துறையின் இந்த முடிவு மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Post a Comment

0 Comments