ஏலப் பட்டியலில் 240 இந்திய வீரர்களும் 110 வெளிநாட்டு வீரர்களுமாக மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது மேலும் 19 வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.
ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 125 கோடி இந்திய ரூபாயை செலவிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தக்க வைத்த வீரர்களுக்கான ஊதியம் போக மீதமுள்ள தொகையை கொண்டு தான் ஏனைய வீரர்களை வாங்க முடியும்.
அவ்வகையில் அதிகபட்சமாக முன்னாள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Knight reders) 64.3 கோடி ரூபாய் கையிருப்பு வைத்துள்ளது. குறித்த அணி 13 வீரர்களை வாங்க வேண்டியுள்ளது.
05 முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்சிடம் 43.4 கோடி இருப்பு காணப்படுகிறது. அவர்களுக்கு 04 வெளிநாட்டவர்கள் உட்பட 09 வீரர்கள் தேவை.
மும்பை இந்தியன்சிடம் குறைந்தபட்ச தொகையாக 2½ கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. 20 வீரர்களை தக்க வைத்துள்ள குறித்த அணி இன்னும் 5 வீரர்களை எடுக்கலாம்.
ஒவ்வொரு அணியிலும் குறைந்த பட்சம் 18 தொடக்கம் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை இடம் பெறலாம்.
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான கெமரூன் கிரீன், ஜேக் பிசெர் மெக்குர்க், இந்தியாவின் வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், இங்கிலாந்து சகலதுறை வீரரான லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோருக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களின் அடிப்படை விலை 02 கோடி ரூபாயாகும். இதே போன்று மதீஷா பத்திரன (இலங்கை), குயின்டன் டி கொக் (தென்னாப்பிரிக்கா), சையத் முஷ்டாக் அலி கிண்ண போட்டியில் அசத்தும் சர்ப்ராஸ் கான் ஆகியோரும் பெரும் கவனத்தை ஈர்க்கின்றனர்.
மினி ஏலத்திற்கு என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வகுத்துள்ள புதிய விதிமுறைகளின் பிரகாரம் வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டும் கட்டணத்தில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிகபட்ச தக்கவைப்பு தொகை (ரூ.18 கோடி) அல்லது முந்தைய மெகா ஏலத்தில் அதிகபட்ச ஏலம் போன வீரரின் தொகை (ரிஷப் பண்ட் ரூ.27 கோடி) இவற்றில் எது குறைவோ அதுவே வழங்கப்படும்.
எனவே, மினி ஏலத்தில் கெமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு மேல் ஏலம் போனாலும் அவருக்கு ரூபாய் 18 கோடி மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தொகை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வீரர்களின் நலத்திட்ட நிதிக்கு பயன்படுத்தப்படும்.
பிற்பகல் 2.30 PM மணிக்கு ஏல நிகழ்வு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments